பிரான்சின் அரசமைப்பின் 49.3 ஷரத்தின் கீழ் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தோல்வியடைந்ததை அடுத்து அதே அரசமைப்பு விதிகளின் கீழ் ஓய்வூதியத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றியே நிறைவேறியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாட்டின் அரசமைப்பின் கீழ் தற்சமயம் சட்டமாக்கப்பட்டுவிட்ட போதிலும் அதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எலிசபெத் போர்னின் அரசைக் கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முன்வைத்த பிரேரணைகள் நேற்று முன்னிரவு சபையில் தோல்வியடைந்த கையோடு பாரிஸ் உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

பாரிஸில் இளைஞர் குழுக்கள் ஆங்காங்கே வீதிகளில் காவல்த்துறையினரோடு மோதியதால் இரவிரவாகப் பதற்றம் நிலவியது. நகரில் சில இடங்களில் வீதிகளில் அகற்றப்படாமல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளுக்குத் தீ மூட்டப்பட்டது.
போர்தோ (Bordeaux) றென் (Rennes) ஸ்ரார்ஸ்பூ (Strasbourg) லீல் (Lille) துளூஸ்(Toulouse) லீமோஸ்(Limoges) , செய்ன் எற்றியன் (Saint-Etienne) பிரெஸ்ட் (Brest,) லியோன்(Lyon) றுவன் (Rouen) , நான்ஸி (Nancy) உட்படப் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் மக்கள் பேரணிகளும் அதை ஒட்டிய வன்செயல்களும் இடம் பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்துக்கு அருகே வீதியில் இரவிரவாக ஒன்று திரள முயன்ற கூட்டத்தினரைப் காவல்த்துறையினர் தடுத்து வெளியேற்றினர். பாரிஸில் ஆர்ப்பட்டக்காரர்களை அடக்குவதற்குப் “காவல்த்துறை வன்முறை” பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நன்றி – தாஸ்நியூஸ் – பாரிஸ்.