போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளை இழிவுபடுத்தமால் முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் போது ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாகக் கண்டன அறிக்கை ஒன்றை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“1987ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ளது.
உலகின் பல இடங்களில் நினைவேந்தல்கள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அந்தப் புனித மண்ணில் அரங்கேறிய சில விரும்பத்தகாத செயல்கள் மக்களிடையே அறச்சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தியாகத்தின் எல்லையைக் கேள்விக்குள்ளாக்கிய தியாகி திலீபனின் நினைவேந்தல் நாளில் அரங்கேற்றப்பட்ட விரும்பத்தகாத செயல்கள் சந்தேகங்களையும் எழுப்பிச் சென்றுள்ளன.
தியாகி தீபம் திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள் எவையுமே 35 வருடங்கள் கடந்தும் நிறைவேறாது அவை அந்தரத்தில் தொங்கியே நிற்கின்றன. அவரது கனவுகளை மெய்ப்பிப்பதே தமிழ் மக்களது கடமையாகவும் உள்ளது.
தொடர்ந்து இவ்வாறாக நம் இனத்தையும் விடுதலை போராட்ட வரலாற்றையும் உலக அரங்கில் கொச்சப்படுத்தும் விதமான கீழ்த்தர விடயங்களை தவிர்த்து, நம் போராட்ட வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள நாம் அதை இழிவுபடுத்த வேண்டாம் எனவும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நம் தாயகத்தில் இடம்பெறக் கூடாது எனவும் வலியுறுத்துவதுடன், இந்த விடயத்துக்கு எமது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது” – என்று மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.