தமிழின படுகொலை நினைவேந்தல் நாள் அழைப்பு. 2009ஆம் ஆண்டு இதே தினங்களில் ஈழத்தமிழினத்தை துடிக்கத் துடிக்க , துடைத்தழித்து ஒரு இன அழிப்பை சிறீலங்கா அரசு கொடூரமாக மேற்கொண்டது.
இன விடுதலைக்காக போரிட்ட தமிழினத்தை சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் உலகினால் மனிதகுலத்திற்கு எதிராக பயன் படுத்த முடியாதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் போர்முறைகளையும் கொண்டு கொன்றொழித்து.
தமிழின அழிப்பொன்றை அரங்கேற்றியதை உலக வல்லாதிக்க தேசங்களும் வெறுமனே பார்த்து நின்றதுடன் மறைமுகமாக ஆதரவையும் வழங்கின. பாதுகாப்பு வலயங்கள் என்று அரசினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்ச மடைந்த அப்பாவி மக்களையும் காயமடைந்து வைத்தியசாலைகளில் தஞ்சமடைந்த மக்களையும் செல் வீசியும் கொத்துக் குண்டுகளை வீசியும் இனவெறி இராணுவம் கொன்றொழித்த போது ஐ.நா சபையும் ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இம்மண்ணில் தங்கள் பிரசன்னத்தை வெறுமைப்படுத்திக் கொண்டன.
போதிய உணவனுப்பாது , காயமடைந்தவர்களுக்கு மருந்தனுப்பாது மிகக் குரூரத்தனமாக தமிழின அழிப்பை சிறீலங்கா அரசு மேற்கொண்ட போது இந்த ஜனநாயக உலகம் வெறுமனே பார்த்து நின்றது.
இன்றுவரை நீதி வழங்கப்படாத இவ் இன படுகொலையின் 13 ம் ஆண்டிற்கான நினைவேந்தல் 2022. 05. 18 இல் முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.எனவே அனைவரும் பேதங்களைத்துறந்து , சுயலாப , சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் அன்று மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் ,கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருவோம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு , வடக்குக் கிழக்கு. தொடர்புகளுக்கு அகத்தியர் அடிகளார் அருட் பணி லியோ அடிகளார்.