இரம்புக்கனையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung அழைப்பு விடுத்துள்ளார்.
ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர், அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் இதனை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 24 பேர் காயமடைந்தனர்.
இரம்புக்கனை நகரில் ரயில் மார்க்கத்தை மறித்து நேற்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு நேற்று மாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.