பாரிஸ் நோர்த் டாம் மாதா கோவிலின் நிலத்தடியில் இருந்து புராதன கல் பேழை ஒன்று அண்மையில் மீட்கப்பட்டது. இதனை திறந்து ஆய்வு செய்தவற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 இல் தீக்கிரையான மாதா தேவாலயத்தின் கூரை உட்பட அதன் கட்டுமானங்களைப் புனரமைக்கும் பணிகள் தற்சமயம் அங்கு நடைபெற்று வருகின்றன. இதன் போது தேவாலயத்தின் உள்ளே ஒரு பகுதியில் தரை தோண்டப் பட்ட சமயம், சுமார் இருபது மீற்றர் ஆழத்தில் கல்லாலான புராதன சவப்பேழை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மனித உருவிலான – நன்கு பாதுகாக்கப் பட்ட அந்த மர்மப் பேழை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அவர்கள் பேழையை திறக்காமலேயே அதன் உள்ளே இருக்கின்ற பொருள்களை என்டோஸ்கோபிக் கமெரா மூலம் ஆய்வு செய்துள்ளனர். எலும்புக் கூட்டின் மேற்பகுதி, இலைகளாலான தலையணை, துணி மற்றும் சில பொருள்களை உள்ளே அடையாளம் கண்டுள்ளன.
பாதுகாப்பான இடம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் பேழை விரைவில் தென் மேற்கு நகரமாகிய துளுசில் அமைந்துள்ள தேசிய தடயவியல் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு திறந்து பரிசோதிக்கப்படவிருப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருடையது என்ற அடையாளம் தெரியாத அந்த மனித எச்சம் எவ்வாறு,? ஏன் நோர்த் டாம் தேவாலயத்தின் அமைவிடத்தின் கீழ் புதைக்கப்பட்டது? கடந்த பல நூற்றாண்டுகளாக அது அங்கேயே இருந்து வந்ததா?அல்லது அங்கு மீளப் புதைக்கப்பட்டதா? அதன் அடக்க வடிவமைப்பு முறை, அதன் காலம், இறந்தவரின் சமூக நிலை, என்பன சொல்கின்ற செய்தி என்னவாக இருக்கும்? இவை போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கின்ற அந்தக் கல் பேழை தொடர் பான புதிர்களை அறிவதற்காக கத்தோலிக்கர்கள் உட்பட பிரான்ஸ் நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.