உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 186 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 344 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என உக்ரைன் அரசு தலைமை வக்கீல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷிய படைகளின் தாக்குதல்களில் உக்ரைனில் உள்ள 938 கல்வி நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளன. 87 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷியா சிறை வைத்துள்ளது என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷிய அரசு சிறைகளில் அடைத்து உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில்,ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற அதிபர் புதின் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று. எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.