பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மீட்புக் குழுவினர் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
உள்நாட்டில் மெகி – அகடன் புயல், நேற்று முன் தினம் மணிக்கு 65 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றுடன் தீவுக்கூட்டத்தைத் தாக்கியது.
புயல் கிழக்கு கடற்கரையை தாக்கியதால் 13,000க்கும் மேற்பட்ட மக்கள் உயரமான பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
கனமழை மற்றும் காற்றினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகள் மற்றும் வயல்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் புயல் இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸை பொதுவாக ஒவ்வொரு வருடமும் சராசரியாக 20 புயல்கள் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.