உக்ரைன் – ரஷ்யா இடையில் போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களுக்கு பல பொருளாதார தடைகளை விதித்து, அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கீவ் நகரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, தன் படைகளை ரஷ்யா திரும்பப்பெற்றது. அங்கிருந்து விலகுவதற்கு முன், மக்களை ரஷ்ய படையினர் படுகொலை செய்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முடக்க தவறிவிட்டதாக, உலக நாடுகள் மீது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார். இதன் காரணமாக, ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்கவும், உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கவும் மேற்கத்திய நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் துவங்கியது முதல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். புடின் மீது பல தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இந்நிலையில், புடினின் மகள்களான மரியா புடினா மற்றும் கேட்டரினா டிகோனோவா மீது, பல தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் வாயிலாக, அமெரிக்காவில் அவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதேபோல், ரஷ்ய பிரதமர் மிக்கெய்ல் மிஸ்தின், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி மற்றும் குழந்தைகள், ரஷ்யாவின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வெதேவ் ஆகியோருக்கும், ரஷ்யாவை சேர்ந்த இரண்டு வங்கிகளுக்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கீவ் நகரின் மேற்கில் அமைந்துள்ள ஆண்டிரிவ்கா கிராமத்தில், இதுவரை 20 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.