உக்ரைன் தலைநகரப் பிராந்தியத்தில் ரஷ்யப்படைகள் மேற்கொண்ட சிவிலியன்கள் படுகொலைகளைப் போர்க் குற்றம் என்றும் இனப்படுகொலை எனவும் பிரகடனப்படுத்தும் அறிவிப்புகளை மேற்கு நாடுகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதனைப் போர்க் குற்றங்களாகக் (War crimes) கருதலாமே தவிர இனப்படுகொலை (Genocide) என்ற சொல்லால் அழைக்க முடியாது என்று நிபுணர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இனப்படுகொலை தொடர்பான 1948ரோம் பிரகடனம் கூறும் குற்றங்களுக்குள் இந்தப் போர்க் குற்றங்கள் உள்ளடங்குமா என்பதை சட்ட அறிஞர்களே தீர்மானிக்கலாம். நாடுகளோ அல்லது சில ஊடகங்களோ அதனை முடிவு செய்து விட முடியாது – என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யப்படைகள் வெளியேறிய பகுதிகளில் சிவிலியன்களுடையவை எனக் கூறப்படும் நூற்றுக் கணக்கான உடல்கள் காணப்படுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.தலைநகர் கீவுக்கு அருகே பூட்சா (Boutcha) என்னும் இடத்தை ரஷ்யப் படைகள் மிக மோசமாகத் துவம்சம் செய்திருப்பதாகவும் அங்கு தண்டனை வழங்கும் பாணியில் கொல்லப்பட்டவர்களுடைய சடலங்கள் தெருக்கள் எங்கும் கிடக்கின்றன என்றும் சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூட்சா நகரில் மட்டும் 330 சிவிலியன்கள் தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பூட்சாவில் படுகொலை நடந்துள்ளது என்று வெளியாகும் தகவல்களை “சோடிக்கப்பட்டவை” என்று கூறி மொஸ்கோ நிராகரித்திருக்கிறது. ரஷ்யாவின் இந்தப் போர் குற்றத்தை இனப் படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் அரசும் போலந்து போன்ற நாடுகள் சிலவும் முன் வைத்துள்ளன.
உலகிற்குமூடி மறைக்கப்பட முடியாத பூட்சா படுகொலைகளை போர்க் குற்றம் என்று மேற்கு நாடுகள் கண்டித்து வருகின்றன. அதற்காக ரஷ்யா மீது புதிதாகப் பல தடைகளை அறிவிப்பதற்குப் பிரான்ஸ்,ஜேர்மனி போன்ற நாடுகள் தயாராகி வருகின்றன. பாரிஸில் உள்ள ரஷ்ய ராஜதந்திரிகள் முப்பது பேரை நாட்டை விட்டு வெளியேற்றும் உத்தரவு விடுக்கப்படவிருப்பதாக பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.