மிரிஹான, பங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன்போது, பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பஸ் ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பஸ் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

