இன்று(30) மற்றும் நாளைய(31) தினங்களில் டீசலுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
37,500 மெட்ரிக் தொன் டீசலை கொண்டு வந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல்போன காரணத்தினால் டீசலை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு தடங்கலின்றி தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெட்ரோல் விநியோகம் வழமைபோன்று தட்டுப்பாடு இன்றி முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.