கொழும்பு நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஹங்கேரி நாட்டு நிதியுதவியில் கொஹுவல மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கொஹுவல மேம்பால நிர்மாணப்பணிகள் கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மற்றும் ஹங்கேரிய வர்த்தக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் சியாட்டோ ஆகியோரின் தலைமையில் கொஹுவல சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மேம்பாலம் கொஹுவல சந்தியிலிருந்து கொழும்பு – ஹொரணை 120 பஸ் பாதையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், மேம்பாலத்தின் கீழ் பகுதியால் நுகேகொட – களுபோவில வீதிக்கு செல்ல முடியும். ஹங்கேரி அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட கொஹுவல மேம்பாலம் 297 மீட்டர் நீளமும் 9.4 மீட்டர் அகலமும் கொண்டது.
மேலும், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நான்கு வழிப்பாதை அமைக்கப்படவுள்ளதுடன், நுகேகொட- களுபோவில வீதியில் போக்குவரத்து சமிக்ஞைகளைப் பயன்படுத்தி போக்குவரத்துக் கட்டுப்பாடும் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன் ஊடாக கொஹுவல நகரின் கடும் போக்குவரத்தை எளிதாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மதிப்பீட்டுச் செலவு 2648 மில்லியன் ரூபாவாகும். இத்திட்டம் 22 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இதுவரை 46% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் நலிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் பேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டங்களை தயார் செய்து பணிகளை துரிதப்படுத்துமாறு பணித்தார்.