ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் தனது மனைவியை கேலி செய்ததாக கூறி மேடைக்குச் சென்ற வில் ஸ்மித் , கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றார். இந்நிலையில் விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் , சிறந்த ஆவணப்படத்திற்கான பரிசை வழங்கிக் கொண்டிருந்தார்.
இதன்போது கிண்டலான தொனியில் வில் ஸ்மித் மனைவி பற்றி தொகுப்பாளர் கிறிஸ் ராக் பேசத் துவங்கினார். அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் இறுக்கமாக செதுக்கப்பட்ட முடியை ‘ஜி.ஐ. ஜேன்’ படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு ஒரு நகைச்சுவையை கூறினார்.
இதன்போது உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து மேடைக்கு சென்றார் வில் ஸ்மித் யாருமே எதிர்பார்க்காத வகையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார்.
ஸ்மித் அறைந்ததும் அரங்கம் முழுவதும் அமைதி மற்றும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஸ்மித் அமைதியாக தனது இருக்கைக்குத் திரும்பினார். அதன் பின்னர் உரத்த குரலில் ‘என் மனைவியின் பெயரை உங்கள் வாயில் இருந்து உச்சரிக்காதீர்கள்’ என்று கத்தினார். இந்த சம்பவம் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதேவேளை ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ,அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அலோபீசியா என்பது திட்டு திட்டாக முடி உதிரும் நோய் ஆகும் . கடந்த 2018 இல் தனக்கு இந்த நோய் இருப்பதாக ஐடா பிங்கெட் அறிவித்திருந்தார் .
இந்நிலையில் தன் காதல் மனைவியிடம் உள்ள உடல்நலக் குறைவை ஆஸ்கார் விழாவில் நகைச்சுவையாக்கியதால் ஸ்மித் கோபம் கொண்டு தொகுப்பாளரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
