உடலின் வெளியிலும் உட்புறத்திலும் அதிக எண்ணிக்கையிலான முடிச்சுகள் மற்றும் கட்டிகளுடன் ‘நியூரோபைப்ரோமாடோசிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் துலிப் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள இந்த நோயாளிகளை முறையாக கணக்கெடுக்கவோ, நோய் பரவலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறைந்த பட்சம் இலங்கையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நோய் தொடர்பில் அதிக விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது ஒரு நரம்பியல் நோயாகும். இதில் நரம்பு முனைகள் பெரிதாகி, அகற்றப்படக்கூடிய கட்டிகள் மற்றும் அகற்ற முடியாத கட்டிகள் இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த புடைப்புகள் உடலின் மேற்பரப்பிலும் உடலில் உள்ள எந்த சுரப்பியிலும் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரம்பரை பரம்பரையாக பரவும் இந்நோயின் அறிகுறிகள் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் தோன்றாவிட்டாலும், வயதாகும்போது அவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.