உலகம் செய்திகள்

பிரான்ஸ் வெர்டுன் நகரப் போர் அழிவுகளோடு உக்ரைன் மரியுபோலை ஒப்பிட்ட ஷெலான்ஸ்கி!

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு உக்ரைன் அதிபர் வீடியோ உரை”Bataille de Verdun” (Battle of Verdun) எனப்படுவது முதலாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்ட பிரான்ஸின் வெர்டுன் நகருக்கானசமர் ஆகும். மிக நீண்ட காலம் – சுமார்300 நாட்கள்- ஜேர்மனியப்படைகளால்முற்றுகையிடப்பட்டு ஷெல் வீசி அழிக்கப்பட்ட அந்த நகரத்தின் காட்சிகள்(1916)முதலாம் உலகப் போரின் முக்கிய சாட்சியாக இன்றும் பேணப்படுகின்றன.

பிரான்ஸின் வட கிழக்கே ஜேர்மனி எல்லையோரம் அமைந்துள்ள வெர்டுன் (Verdun)பகுதியில் சுமார் ஒரு லட்சம் போர் வீரர்களது உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. கடந்த பல நாட்களாக ரஷ்யப் படைகளது இடைவிடாத குண்டுவீச்சுக்கு இலக்காகி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் மரியுபோல் நகரின் நிலையை வெர்டுன்நகரின் வரலாற்றோடு இணைத்துப் பேசியிருக்கிறார் உக்ரைன் அதிபர் ஷெலான்ஸ்கி.

பிரான்ஸின் நாடாளுமன்றத்துக்கு வீடியோ வழியாக இன்று உரையாற்றிய அவர், ரஷ்யாவில் இன்னமும் இயங்கி வருகின்ற பிரான்ஸின் வர்த்தகக் கம்பனிகளை அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.”மதிப்புகள் லாபத்தை விட மதிப்புமிக்கவை என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று என்று அவர் குறிப்பிட்டார். ரெனோல்ட் (Renault) லிறூவா மேர்லான் (Leroy Merlin) உஷான் (Auchan)போன்ற கம்பனிகள் பெண்கள், குழந்தைகளைக் கொல்லுகின்ற ரஷ்யாவின் யுத்தத்துக்கு நிதி அனுசரணை அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது உரையில் கோரினார்.

ஷெலான்ஸ்கியின் உரை ஆரம்பித்த வேளையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளது உறுப்பினர்களும் பலத்த கரகோஷம் எழுப்பி அதனை வரவேற்றனர். ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பமாகி கடந்த 28 நாட்களில் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, ஜப்பான், ஜேர்மனி, இஸ்ரேல், இத்தாலி உட்படப் பல முக்கிய நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு வீடியோ வழியாக ஷெலான்ஸ்கி முக்கிய உரைகளை வழங்கியுள்ளார். காக்கி நிற ரீ-சேர்ட் அணிந்தவராகத் தோன்றி அவர் ஆற்றும் உரைகள் நாடாளுமன்றங்களுக்கு வெளியேயும் மிகப் பெரிய மக்கள் தொகையினரால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

அதிபர் ஷெலான்ஸ்கியின் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கான உரையில் ரஷ்யா மீதான உக்ரைனின் எதிர்ப்பை விளக்குவதற்கு வின்சென்ட் சேர்ச்சிலின் (Winston Churchill) இரண்டாம் உலக யுத்த உரையைத் தொடர்புபடுத்தினார். அமெரிக்கக் காங்கிரசுக்கு ஆற்றிய உரையில் தற்போதைய நிலையைப் பேர்ள் துறைமுகம் (Pearl Harbor), செப்ரெம்பர் 11 (9/11) தாக்குதல்களோடு நினைவுபடுத்தினார். பனிப்போரின் போது ஐரோப்பாவை இரண்டாகப் பிரித்த சுவர் இடிக்கப்பட்டதை ஜேர்மனிய நாடாளுமன்றத்துக்கான(Bundestag) தனது உரையில் குறிப்பிட்டுப் பேசிய ஷெலன்ஸ்கி, ஐரோப்பாவில் தற்போது எழுப்பப்படும்”புதிய சுவரை” இடிப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

அதிபர் ஷெலான்ஸ்கி போரின் தொடக்கத்தில் ஒரு “கமெடி பீஸ்”, “அரசியல் அனுபவம் அற்றவர்” என்றவாறெல்லாம் விமர்சிக்கப்பட்டவர். ஆனால் கடந்த 28 நாட்களில் போருக்குத் தலைமை வகித்தவாறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வீடியோ வழியாக மேற்கு நாடுகளது நாடாளுமன்றங்களுக்கும் அவர் ஆற்றிய பல உரைகள் உலகளாவிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன. முன்னனுபவமற்ற அவரது ராஜீக நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. சரளமாக ஆங்கிலமொழியில் பேசவல்ல கிழக்கு ஐரோப்பியத் தலைவர்கள் மிகச் சிலரில் ஒருவராக விளங்கும் ஷெலான்ஸ்கி, உயிர் ஆபத்துகளுக்கு மத்தியிலும் தலைநகரில் பகிரங்கமாக நடமாடி வருகிறார்.

ரஷ்ய ஆதரவு பெற்ற பத்து எதிர்க்கட்சிகள் மீது அவர் தடை உத்தரவுகளை விடுத்துள்ளார். அதேசமயம் நீண்ட அரசியல் அனுபவம் இல்லா விடினும் நாட்டின் பாதுகாப்புப் படைகளைத் தொடர்ந்தும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துப் போரை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார் என்பதை சர்வதேச அவதானிகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். ரஷ்யாவுடனான பேச்சுக்களில் எந்தவித விட்டுக் கொடுப்புகளையோ சமரசங்களையோ செய்வதாயினும் அவை உக்ரைன் மக்களது விருப்பத்தை அறியும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று அவர் கடைசியாகக் கூறியிருக்கிறார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இன்று விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ

namathufm

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி.

namathufm

இலங்கையில் சில மாதங்களில் குழந்தைகளின் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு.

Thanksha Kunarasa

Leave a Comment