இலங்கை செய்திகள்

சர்வகட்சி மாநாட்டில் ரணில் கடும் சீற்றம்! மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பது பற்றி ஆராய நாம் இங்கு வரவில்லை, அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றிக் கதைக்க முடியாது, இறுதியில் விஜயன் மன்னர் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை இருந்திருக்காது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்மரசிங்க கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று சர்வகட்சி மாநாடு நடைபெற்றிருந்தது. இந்த மாநாட்டை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றிருந்தார்.

இதன்போது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உரையாற்றும் போது நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே தற்போதைய நெருக்கடி நிலை ஏறபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கையில்,

நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவே நாம் இங்கு வந்தோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல.

எனினும், குறுகிய அரசியல் நோக்கில், தற்போதைய நிலைமைக்கு கடந்த அரசுதான் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார். அதற்கு என்னாலும் பதில் வழங்க முடியும். பிறகு அவர் கருத்து வெளியிடுவார். அதற்கு நான் பதில் வழங்குவேன்.

அப்படியானால் இந்தப் பிரச்சினையைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டியிருக்கும். இறுதியில் விஜயன் மன்னன் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கும் வரக்கூடும். அதேபோல் எதிரணிகளைத் தோற்கடிக்க நாம் இங்குவரவில்லை.

எதிர்காலத்தில் அவர்களையும் இணைத்து கொள்ளும் நோக்கில்தான் வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு உங்களுக்கு ஏதேனும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகின்றோம். கடந்த கால நிலவரம் பற்றியே அவர் கூறவிளைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பிலும் ரணில் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார். நிதி அமைச்சரிடம் இது பற்றி விளக்கம் கோரியுள்ளார்.

இதேவேளை, இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அழைத்து விசாரிப்போம் என ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

‘இல்லை, வரைவு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வழங்க முடியாது. முழுமையான அறிக்கையையே வெளியிட முடியும்’ என்று பசில் பதில் அளித்துள்ளார்.

Related posts

மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

namathufm

7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

Thanksha Kunarasa

சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment