இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் மூளாய் – மாவடி வீதியில், காளி கோயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதில், யாழ். நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் – கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என்பவரே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்பவர் படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தலையில் படுகாயமடைந்தவர் அதிக இரத்த இழப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.