ரஷ்யா இரண்டாவது ஹைப்பர் சோனிக் ஏவுகணைத் தாக்குதலை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் படைகளது டாங்கிகளுக்கு எரிபொருள் வழங்குகின்ற எண்ணெய்க் குதங்கள் மீது கஸ்பியன் கடல் (Caspian Sea) பகுதியில் இருந்தும் கிரிமியா குடாவின் வான் பரப்பில் (airspace of Crimea) இருந்தும் ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டதாக மொஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதானஅடுத்தடுத்த ஹைப்பர்சோனிக் தாக்குதல்கள் சர்வதேச கவனத்தைப் பெரிதும் ஈர்த்துவருகின்றன. ஒப்பீட்டளவில் ரஷ்யா மற்றும் சீனாவிடம் உள்ள ஹைப்பர் சோனிக் ஆயுதங்களின் முன்னால் அமெரிக்காவின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதைப் படைத் துறை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதே சமயம் போரில் எதிர்பார்த்த இலக்குகளை உரிய காலத்தில் எட்டமுடியாமற் போயிருப்பதால் ரஷ்யா உக்ரைன் மீது இதன் மூலம் ஓர் உளவியல் தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது.
ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதலால் பல இடங்களில் பதுங்கியிருந்த பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.