வடக்கில் இருந்து பனங்கள்ளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில், வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஒரு ஏற்றுமதியினை செயற்படுத்துவதற்கான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்த தயாராக உள்ளோம். அதன் ஒரு அங்கமாக பனங்கள்ளு உற்பத்தி கிராமம், பனங்கட்டி உற்பத்தி கிராமம், கடலட்டை உற்பத்தி கிராமம் போன்றவற்றை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் ஏதாவது எமது அமைச்சுக்கு கிடைக்கப்பட்டால் நாங்கள் அதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் தற்போது நமது நாட்டிற்கு ஏற்றுமதி கட்டாயம் தேவையானதாக தெரிவித்த அமைச்சர், நுவரெலியாவில் கோப்பி, தேயிலை போன்றவை ஏற்றுமதி செய்யப்படுவதுபோல, வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது. எனவே வடக்கில் இருந்து பனங்கள்ளை தயார் செயது ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.