உலகம் செய்திகள்

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ‘கமிகாஸி’ தற்கொலை ட்ரோன்கள்!

உக்ரைன் பலவித நவீன போர் ஆயுதங்களின் சோதனைக் களமாக மாறுகின்றது. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிரான போர்களில் மட்டுமே இது வரை பயன்படுத்தப்பட்டு வந்த தற்கொலை ட்ரோன் ஊர்திகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தொலைக்காட்சி வழியே உரையாற்றிய போது மேலும் ஆயுத உதவிகளைக் கோரியிருந்தார். அதனையடுத்து சுமார் 800 மில்லியன் டொலர் பெறுமதியான போர் ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது உக்ரைன் மீது வான் பறப்புத் தடை வலயத்தை அறிவிக்க முடியாத இக் கட்டில் நேட்டோ இருப்பதால் ரஷ்யப் போர் விமானங்களை வீழ்த்துவதற்காக பெருமளவு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அது உக்ரைனுக்கு வழங்குகின்றது. அதிபர் பைடன் கடைசியாக அறிவித்த ஆயுத உதவிப் பெட்டகத்தில் இந்த ஏவுகணைகளுடன் சுமார் 100 கமிகாஸி தற்கொலை ட்ரோன்களும் உள்ளடங்குகின்றன.

அமெரிக்காவுக்கு அதிநவீன பாதுகாப்புச் சாதனங்களைத் தயாரிக்கின்ற ஏரோ விரோன்மென்ற் (AeroVironment) நிறுவனத்தின் “ஸ்விட்ச்பிளேட்-300” (Switchblade 300) என்ற ட்ரோன்களே முதல் முறையாக உக்ரைனுக்குக் கிடைக்கின்றன. இரண்டரைக் கிலோ எடையுடைய அந்தச் சிறிய ட்ரோன்கள் முதலில் ஷெல் போன்ற ஏவுகணை ஒன்றைச் செலுத்தி இலக்கைத் தாக்கும். பின்னர் தானே ஒரு ஏவுகணையாக மாறி இன்னொரு இலக்கைத் தாக்கிவிட்டுத் தன்னையும் அழித்துக் கொள்ளும். கமிஹாஸி எனப்படும் இந்த வகை ட்ரோன்களைத் தற்கொலை ட்ரோன்கள் (suicide drones) என்று அழைப்பதற்கு இவ்வாறு தாக்கி விட்டுத் தன்னையும் அழித்துக் கொள்வதே காரணமாகும்.(கமிகாஸி / Kamikaze என்பது இரண்டாம் உலகப் போரில் எதிரிகள் மீது மோதி வெடிக்க ஜப்பான் பயன்படுத்திய தற்கொலைப் படை விமானங்களின் பெயர் ஆகும்.) ஒரு முறை மட்டும் பயன்படுத்துகின்ற விளையாட்டுப் பொருள் போன்ற இந்தவகை ட்ரோன்களை பறக்கும் கைத் துப்பாக்கி என்றும் அழைக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் போரில் அவற்றை அமெரிக்கா ரகசியமாகப் பயன்படுத்தியது. இப்போது ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படவுள்ளது. ரஷ்யா படையெடுப்பின் ஆரம்பத்தில் இது போன்ற ஆளில்லாமல் இயங்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் படைகளது நிலைகளைத் தாக்கியிருந்தது. நேரடி மோதல்கள் இன்றி எதிரிக்கு அதிக சேதங்களை ஏற்படுத்துவதில் இவ்வாறான ட்ரோன்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. சிரியா போரில் இவற்றை ரஷ்யா முதலில் பயன்படுத்தி இருந்தது. துருக்கி நாட்டின் தயாரிப்பான இவை போன்ற ட்ரோன்கள் தாக்கும் திறனில் மேம்பட்டவையாக உள்ளன. அவற்றை உக்ரைன் படைகள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவூட்டிய இந்த ட்ரோன்களின் பாவனை குறித்துப் பரவலாக எதிர்ப்புகள் உள்ள போதிலும் சமீபகாலப் போர்களில் வலுச்சம நிலையை மாற்றுவதில் அவை முக்கியமான பங்கை வகிக்கிப்பதை அவதானிக்க முடிகிறது.

அண்மையில் ஒரு நிலப் பகுதி தொடர்பாக அஸர்பைஜான் ஆர்மீனியா நாடுகள் இடையே மூண்ட மோதலில் துருக்கியில் தயாரிக்கப்பட்ட சிறிய வெடிகுண்டு ட்ரோன்களை அஸர்பைஜான் படைகள் பயன்படுத்தியிருந்தன. அந்தப் பிணக்கு முடிவுக்கு வந்ததில் ட்ரோன்களுக்கும் பங்குண்டு என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.அதேவேளை அண்மையில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சமயத்தில் காபூலில் இந்த ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஏழு குழந்தைகள் உட்பட பத்து ஆப்கானியர்கள் உயிரிழந்தனர். அத்தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டது என்பதைப் பென்ரகன் பின்னர் ஒப்புக்கொண்டது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

வில் ஸ்மித் அடித்த அடி.. கிறிஸ் ராக்கிற்கு கிடைத்த மகிழ்ச்சியான சம்பவம்

Thanksha Kunarasa

இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் நம்பிக்கையில் தீவிர இடது சாரி!

namathufm

இடிந்து விழுந்தது ஊர்காவற்துறை இறங்கு துறை !

namathufm

Leave a Comment