‘ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், மலையக தமிழ் இலங்கை மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பெருந்தோட்ட பெண்களை மையப்படுத்திய ஒரு நிகழ்வை கொழும்பில், பிரான்சிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘ தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவராக நான் என் கடமையை முழு நாட்டுக்கும் செய்வேன். மிகவும் பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்காக அதிகம் செய்வேன்.
முதற்கட்டமாக மலையக தமிழர்களின் அரசியல், சமூக அபிலாஷைகளை சர்வதேசமயப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். இந்திய வம்சாவளி மலையக தமிழர் அபிலாஷைகளை தேசிய, சர்வதேசிய அரங்குகளில் முறைப்படி முன்வைக்க நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். அது படிப்படியாக நடக்கும். இதில் நான் பிரதான பாத்திரம் வகிக்கிறேன். எதிர்வரும் வாரங்களில் நாம் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுப்பதை நாடு பார்க்கும்.
இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களை பற்றி அறிந்துள்ள சர்வதேச சமூகம் இனி மலையக தமிழ் மக்கள் பற்றி அறிய வேண்டும். மலையக தமிழர் இல்லாமல் இலங்கை பற்றிய தகவல் முழுமை அடையாது. மலையக மக்கள் படும்பாட்டை இன்று நீங்கள் அறிய விரும்புவது நன்கு தெரிகிறது. இது ஒரு புது நகர்வு. இதை நான் அர்த்தமுள்ளதாக மாற்றுவேன்.
ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், மலையக தமிழ் மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும். தூதுவர் எரிக் லெவர்டின் இதுபற்றிய ஆர்வம் என்னை உற்சாகத்துக்கு உள்ளாக்கியுள்ளது, என தெரிவித்தார்.