உலகம் செய்திகள்

பாரிஸ் வேர்சாய் அரண்மனையில் 27 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் கூடும் விசேட போர்க்கால மாநாடு சுற்றி வரப் பொலீஸார் கடுங் காவல்

பாரிஸின் புறநகரில் உல்லாசப்பயணிகளது தலமாக விளங்கும் château de Versailles என்கின்ற வேர்சாய் அரண்மனையைச் சூழ கடும் கட்டுக் காவல் போடப்பட்டிருக்கிறது. அரண்மனை உல்லாசப் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது. சுற்றாடல் வீதிகளில் போக்குவரத்துக்கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளது தலைவர்கள், உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள பொருளாதார, பாதுகாப்பு, எரிசக்தி நெருக்கடிகளுக்கு கூட்டாக முகம் கொடுப்பது எப்படி என்பதற்கான உத்திகளை வகுப்பதற்காக அரண்மனையில் கூடுகின்றனர்.அதனை முன்னிட்டே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுளளது.

மாநாட்டு செய்திகளைச் சேகரிப்பதற்காக உலகெங்கும் இருந்து சுமார் 700 செய்தியாளர்களும் அங்கு வருகை தந்துள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடு என்ற வகையில் பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இந்த விசேட – முறைசாரா-மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். மாநாட்டை ஒட்டி பாரிஸ் வெற்றி வளைவில்(Arc de Triomphe) ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.103 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த சமாதான உடன்படிக்கை பாரிஸ் சத்தோ து வேர்சாய் (château de Versailles) அரண்மனையிலேயே கைச்சாத்திடப்பட்டது.

2017 இல் மக்ரோன் அதிபராகப் பதவியேற்ற பிறகு-15 நாட்களில் – முதல் உலகத் தலைவராக ரஷ்ய அதிபர் புடினை அழைத்துத் தனது முதலாவது அரசியல் சந்திப்பை நடத்திய இடமும் இந்த அரண்மனை தான். அதே அரண்மனையில் இன்றும் (வியாழன்) , நாளையும் (வெள்ளி) இரு தினங்கள் நடக்கின்ற மாநாட்டில் சமாதான உடன்படிக்கை எதுவும் கிடையாது. அதிபர் புடினும் அழைக்கப்படவில்லை. ஆனால் மாநாட்டுத் தீர்மானங்கள் ஒரு போரை எதிர்கொள்வதில் ஐரோப்பாவின் ஒற்றுமை எந்த அளவில் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கவுள்ளதுடன் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் அது முக்கிய செய்திகளை வெளியிடக்கூடும்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

இலங்கையில் கைப்பேசிகளின் விலைகளும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

இலங்கையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி.

Thanksha Kunarasa

செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது!

namathufm

Leave a Comment