பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஜுலி ஜே.சங்க், பிரதமரை சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கையுடன் காணப்படும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறவினை மேலும் பலப்படுத்தி, அந்த உறவை மேம்படுத்துவதற்கு
தான் முயற்சிப்பதாக அமெரிக்க தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக பேணுவதற்கு உதவுவதாக தெரிவித்த ஜுலி சங்க், இந்நாட்டின் வலுசக்தி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு உதவுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் உறவை அவ்வாறே தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்த பிரதமர், புதிய பதவியில் வெற்றிகரமாக பணியாற்றுவதற்கு ஜுலி சங்கிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.