பங்களாதேஷ் கலமும் சிக்கியது!
பிரான்ஸ் தனது போர்க் கப்பலை ருமேனியாவுக்கு நகர்த்துகிறது!!
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கருங்கடல் பிரதேசம் கடற்கண்ணி ஆபத்து மிகுந்த பகுதியாக மாறியிருக்கிறது.எஸ்தோனியா நாட்டுக் கப்பல் ஒன்று இன்று உக்ரைனின் ஒடிசா துறைமுகம் அருகே கருங்கடலில் வெடி விபத்தில் சிக்கியுள்ளது. வெடிப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. அது கடற்கண்ணியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ள பால்டிக் நாடான எஸ்தோனியா நேட்டோ உறுப்பு நாடாகும். பனாமாவில் பதிவு செய்யப்பட்ட விஷ்டா சிப்பிங் ஏஜென்ஸி (Vista Shipping Agency) என்ற எஸ்தோனியக் கம்பனிக்குச் சொந்தமான சரக்குக் கப்பலே வெடி விபத்தில் சிக்கியுள்ளது. அதிலிருந்த பணியாளர்கள் சிலரைக் காணவில்லை. அதே சமயம் பங்களாதேஷ் நாட்டின் சரக்குக் கப்பல் ஒன்றும் வெடி விபத்தில் சிக்கியதில் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உக்ரைனின் கருங்கடல் ஒல்வியா(Olvia) துறைமுகப் பகுதியில் அந்தக் கப்பலை ஏவுகணை அல்லது கடற்கண்ணி தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்துக்காக ரஷ்யாவின் பங்களாதேஷ் தூதரகம் வருத்தம் தெரிவித்திருப்பதாக செய்தி ஒன்று கூறுகிறது. போர்ப் பதற்றம் நிறைந்த கருங்கடலின் வடக்குப் பகுதியில் பயணிப்பதைத் தவிர்க்கும் படி சர்வதேச வர்த்தகக் கப்பல் நிறுவனங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதேவேளை, உக்ரைனை அண்டியநேட்டோ உறுப்பு நாடுகளது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பிரான்ஸ் தனது ‘சார்ள்-து-ஹோல்'(Charles-de-Gaulle) விமானந் தாங்கிப் போர்க் கப்பலை ருமேனியா நாட்டை அண்டி நகர்த்தியுள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.