பிரான்ஸ் வரும் உக்ரைனியருக்கு ரயில் போக்குவரத்துகள் இலவசம் இது வரை சுமார் 100 பேர் வருகை உக்ரைனில் இருந்து வருகின்ற அகதிகள் அதிவிரைவு மற்றும் இன்ரசிற்றி(TGV et Intercités) ரயில்களில் கட்டணமின்றி இலவசமாகப் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என்று பிரான்ஸின் SNCF போக்குவரத்து நிறுவனம் அறிவித்திருக்கிறது.
டென்மார்க், ஜெர்மனி போன்ற ஏனையசில ஐரோப்பிய நாடுகளும் அகதிகளுக்கான போக்குவரத்துக்களை இலவசமாக்கியிருக்கின்றன. இடம் பெயர்ந்து வருகின்ற உக்ரைன் மக்களை நாட்டினுள் வரவேற்பதற்கு இலகுவான நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸின் எல்லைக்குள் இது வரை நூற்றுக்கும் சற்றுக் குறைந்த எண்ணிக்கையான உக்ரைன் அகதிகள் வருகைதந்துள்ளனர். விமான நிலையங்கள், பிரதான நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்களில் அகதிகளை வரவேற்கும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.தங்கள் பகுதிக்கு வருகை தருகின்ற உக்ரைன் அகதிகள் பற்றிய தகவலைப் பொலீஸ் நிலையங்களுக்கு வழங்கி இலகுவாக அவர்கள் தங்குமிடங்களைச் சென்றடைவதற்கு உதவுமாறு நகரசபைப் பிரதிநிதிகளை அரசு அறிவுறுத்திஉள்ளது.
அதேவேளை, பிரான்ஸில் ஏற்கனவே தங்கியுள்ள உக்ரைன் பிரஜைகளது வதிவிட அனுமதி மேலும் 90 நாட்களால் நீடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனில் இருந்து இதுவரை ஆறுலட்சத்து 60 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் என்று அகதிகளுக்கான ஜ. நாதூதரகம் மதிப்பிட்டுள்ளது. அவர்கள் ஐந்து முனைகள் ஊடாக போலந்து, ருமேனியா, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி,மோல்டோவா நாடுகளின் எல்லைகளுக்குள் சென்றுள்ளனர்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் பாரிஸிலிருந்து குமாரதாஸன்.