உக்ரைன் நாட்டின் விமானத் தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.
ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணி நேரமாக உக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. அது தொடர்பான காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு உரிய பதிலடி தரப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்கும் நிலையில் அதற்கு தங்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது.
கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகின்றன.
ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகின்றன.
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை தற்போது கிடைத்த தகவல்களில் ரஸ்ய படைகள் நடத்திய குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.