இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரில் பயணித்த 9 பேரும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர்.
இரவு நேரம் என்பதால் கார் விபத்துக்குள்ளானது குறித்து யாருக்கும் தெரியவில்லை எனவும் நீண்ட நேரத்திற்கு பின்னரே கார் விபத்து குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ், மாவட்ட நிர்வாகம், மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் விரைந்தனர்.
பின்பு ஆற்றில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும் ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்த 9 பேரின் சடலங்களையும் எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமகளை அழைத்து வருவதற்காக சென்ற போது நடந்த இந்த துயர சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.