பனாமா நாட்டில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று அத்திலாந்திக் கடலில் எரிந்து கொண்டிருக்கிறது. ஜேர்மன் தயாரிப்பான Porsche என்ற நவீன பந்தயக் கார்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட சொகுசு கார்கள் அக்கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.650 அடி நீளமான “Felicity Ace”என்ற அந்தக் கப்பல், ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்குக் கார்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வழியில், அத்திலாந்திக் சமுத்திரத்தில் போர்த்துக்கல் கரைக்குத் தொலைவில் எரிந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. கப்பல் மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் 22 பேரை போர்த்துக்கல் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கார்களை மீட்டெடுக்கின்ற முயற்சிகள் எதுவும் உடனடியாக மேற்கொள்ளப்படவில்லை. Porsche, Volkswagen, Bentley, Audi,Lamborghinis ரகங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் கார்கள் கப்பலில் உள்ளன என்று Volkswagen கார் கம்பனி தெரிவித்திருக்கிறது. உலகின் கார் தொழிற் துறை கொரோனாப் பெரும் தொற்றுக் காரணமாகப் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஒரு கால கட்டத்தில் ஜேர்மனியத் தயாரிப்புகளான புதிய கார்கள் ஆயிரக்கணக்கில் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளன. கப்பலின் கதி தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன். பாரிஸ்.