பெரிய கத்தி ஒன்றைக் காட்டிப் பொலீஸாரை அச்சுறுத்திய இளைஞர் ஒருவர் பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
பாரிஸில் தமிழர்களது வர்த்தக மையமாகிய லா சப்பேல் அருகே அமைந்துள்ள Gare du Nord மத்திய ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் இன்று காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கு பயணிகள் மத்தியில்
சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
வெளியிடங்களுக்கான பிரதான ரயில் இணைப்புப் பிரிவில் (“grandes lignes”) காணப்பட்ட ஐரோப்பியத் தோற்றமுடைய நபர் ஒருவரே அப்பகுதியில் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தினார். பொலீஸார் கத்தியைக் கைவிடுமாறு அவரிடம் பலதடவைகள் கோரினர். ஆனால் அந்த நபர் தொடர்ந்தும் பொலீஸாரை அச்சுறுத்திய வேளையிலேயே சுடப்பட்டார் என்று பொலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.
உயிரிழந்த நபர் 1991 இல் பிறந்தவர்என்றும் அவர் வைத்திருந்த 30 செ. மீற்றர் நீளக் கத்தியில் பொலீஸாருக்கு எதிரான சுலோகம் ஒன்றின் எழுத்துக்கள் காணப்பட்டன எனவும் ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவித்தது.
ஆபத்தான அந்த நபரால் பயணிகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்தைத் தடுத்தமைக்காக பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு உள்துறை அமைச்சர் தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில் பயங்கரவாதச் சாயல் எதுவும் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன். பாரிஸ்.