கொரோனா வைரஸின் புதிய விகாரமான ஒமிக்ரோன், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேரை பலியெடுத்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த ஒமிக்ரோன் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், இந்த எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது,
“கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரோன், தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம்.கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமிக்ரோன் தொற்று முந்தியுள்ளது. ஒமிக்ரோன் லேசான அறிகுறியை ஏற்படுத்துவதாக தோன்றினாலும், இது மிக வேகமாக பரவக்கூடியது. திறமையான தடுப்பூசிகள் செலுத்தும் யுகத்தில் அரை மில்லியன் மக்கள் இறந்திருப்பது கவலையை அளிக்கிறது என்று உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் தெரிவித்துள்ளார்.