உலகம் பிரான்ஸ் செய்திகள்

பாரிஸ் செய்ன் நதிக் கரையோர பாரம்பரிய புத்தகப் பெட்டகங்கள் காலம் மறந்து காணாமல் போகுமா?

பாரிஸ் நகரின் மையத்தில் செய்ன் நதிக் கரையோரம் நடப்பவர்கள் சுவர் கட்டுகளில் பச்சை வர்ணப் பெட்டகங்களை வரிசையில் காணமுடியும். அவை “Bouquinistes” என்று அழைக்கப்படுகின்ற பழைய புத்தக விற்பனையாளர்களது நடைபாதைக் கடைகள். இன்று நேற்று அல்ல ஐந்து நூற்றாண்டுகளாக அந்தப் புத்தகப் பெட்டகக் கடைகள் அதே இடத்தில் நகரின் பிரிக்க முடியாத ஒர் அடையாளமாக இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றன.செய்ன் நதி “இரண்டு புத்தக அலுமாரிகளுக்கு இடையே ஓடுகின்ற உலகின் ஒரே நதி” என்று அழைக்கப்படுவதற்கு இந்தப் பழைய புத்தகக் கடைகளே காரணமாகும்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் உலக அளவில் பாரம்பரியம் மிக்க இடங்களில் (World Heritage Site) ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் இந்த நடைபாதைக் கடை வரிசைகளில் கால் பதிப்பதைப் பெருமையாகக் கருதுவோர் பலர்.நொத்-டாம் மாதா கோவில் (Notre-Dame Cathedral) போன்ற நகரின் புராதன சின்னங்கள் பல அமைந்திருக்கின்ற பகுதியில்-சென் நதியின் இருபுறக் கரைக் கட்டுகளிலும்-சுமார் மூன்று கிலோ மீற்றர்கள் நீளத்துக்கு நூற்றுக்கணக்கான பெட்டகங்களை வரிசையில் காணலாம்.

முத்திரைகள், தபால் வாழ்த்து அட்டைகள், நினைவுப்பொருள்கள், ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள் பழைய பத்திரிகைகள் உட்பட அரிய இலக்கியங்கள் அடங்கலாக மூன்று லட்சம் பழைய புத்தகங்கள் நூற்றுக்க ணக்கான மரப்பெட்டிகளில் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடைபாதைக் கடைகளை நடத்துவோர் சாதாரணமான வியாபாரிகளைப் போலன்றி மிகவும் சுதந்திரமானவர்கள். கடைகளுக்கு வாடகை எதனையும் செலுத்த வேண்டியதில்லை. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை கடையைத் திறந்து வைத்திருக்கலாம். வாரத்தில் குறைந்தது நான்கு நாட்கள் திறந்திருக்க வேண்டும் என்பது உட்பட ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகளை மாத்திரமே நகர நிர்வாகம் விதித்திருக்கிறது.வருமானம் கருதிய தொழிலாக அன்றி வழிவழியாக வந்த விருப்பத்துக்குரியஒரு பண்பாட்டைத் தொடருகின்ற திருப்தியுடன் அங்கு புத்தகங்களை விற்பவர்களில் பலரும் முதியவர்கள். அநேகர் பரம்பரை பரம்பரையாக அதனைச் செய்து வருகின்றனர். நகரவாசிகளைவிடவும் உலக உல்லாசப் பயணிகளேஅவர்களது வாடிக்கையாளர்கள்.

பாரிஸில் வெளிநாட்டவர் திரளும் இடங்கள் பெருந்தொற்று நோய்க்குப் பிறகு வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அண்மைய ஆண்டுகளாக இணையச் சந்தைகளது எழுச்சியும் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனாப் பெருந் தொற்று நோயும் பழைய புத்தக விற்பனையாளர்களைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளன. பல பெட்டகங்கள் மூடப்பட்டு அவற்றில் பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உல்லாசப் பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது. சுகாதார விதிகள் காரணமாக நகர மக்கள் கடைத் தெருவுக்கு வருவதும் அருகிவிட்டது. புத்தகங்களை வாங்காவிடினும் வழமையாக வந்து தங்களோடு கதை பேசுகின்றவர்களைக் கூடக் காணோம் என்பது மூத்த கடைக்காரர்களது ஏக்கமாக உள்ளது. “அவர்கள் அங்கிருந்து காணாமற்போவது அவமானமானது. ஏனெனில் அவர்கள் பாரிஸ் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள்” என்று பழைய புத்தகப் பிரியர் ஒருவர் கூறுகிறார்.நூற்றாண்டுகள் தொடரும் புத்தகப் பாரம்பரியம் மங்கி மறைந்து விடுமோ? பெட்டிக் கடைகள் மூடப்படுவது குறித்துப் பாரிஸ் நகர சபை நிர்வாகம் கவலை கொண்டுள்ளது. மூடிய கடைகளை எடுத்து நடத்த ஆர்வமுள்ள ஆர்வலர்களைத் தேடி அழைப்பு விடுத்துள்ளது.அது தொடர்பான விளம்பரம் அதன்இணையத் தளத்தில் வெளியாகியுள்ளது.பழைய நூல்களைச் சேகரிப்போரும் விற்க விரும்புவோரும் இலக்கிய ஆர்வலர்களும் எவரானாலும் விண்ணப்பிக்க முடியும். கடை நடத்த விரும்புவோர் பிரெஞ்சு குடிமக்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால்பிரெஞ்சு மொழியைப் பவ்வியமாகப் பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும் தகுதியான விண்ணப்பங்களை நகரசபைக் குழு தெரிவு செய்யும். பெப்ரவரி 18 திகதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலதிக விவரங்கள் City of Paris website இணையத்தளத்தில் பெறமுடியும். உலக மக்களது கவனத்துக்குரிய ஒர் இடத்தில் நூல்களையும் இலக்கியங்களையும் காட்சிப்படுத்தி விற்பதற்கு வெளிநாட்டவர்களுக்கும் இது ஒர் அரிய சந்தர்ப்பம்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் – பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Related posts

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது – பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான்கான்

Thanksha Kunarasa

“ஹைப்பர் சோனிக்” ஏவுகணையால் ஆயுதக் கிடங்கை அழித்தது ரஷ்யா!

namathufm

தென் கொரியாவில் ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment