ஒரு நாட்டைப் பற்றி அறிவதற்கு அந்த நாட்டின் இலக்கியங்கள் எவ்வளவுக்குப் பிற மொழி மாற்றம் செய்யப்படுகின்றன என்பதும் முக்கியமானது. பள்ளி நாட்களில் படித்த உக்ரைன் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல்கள் அந்த தேசத்தில் பிறந்து வாழ்ந்தது போன்ற உணர்வனுபவங்களைத் தந்திருக்கின்றன.(அச்சமயம் அது சோவியத் ஒன்றியம் ) எந்த “இஸங்”களாலும் ஈர்க்கப்படாவிடினும் டிசெம்பர் 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்து பல நாடுகளாகச் சிதறுண்ட நாளின் இரவில் எனது நாட்குறிப்பில் அதனை மிக வருத்தத்துடன் பதிவு செய்தது இப்போதும் நினைவிருக்கிறது. அதற்கு அந்த நாளைய மொஸ்கோ அயல் மொழிப் பதிப்பகத்தின் நாவல் களைப் படித்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.ஒரு தேசத்தின் ஆன்மாவை இலக்கியங்களூடாக உணர்ந்துகொண்ட அனுபவம் தந்த வருத்தமாகக் கூட அது இருந்திருக்கலாம். தற்சமயம் உக்ரைன் மீது சூழ்ந்துள்ள போர் மேகங்கள் அந்தப் பழைய நாட்களை மீட்டுப் பார்க்கச் செய்கின்றன. அவ்வளவு தான் உக்ரைன் 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தனி நாடானது.வரலாற்றில் சோவியத் சாம்ராஜ்ஜியங்களை எடுத்துப் பார்த்தாலும் சோவியத் யூனியனை நோக்கினாலும் அவற்றின் பிரிக்க முடியாத பகுதியாகத் – தூணாக – (pillar of the Soviet Union) உக்ரைன் இருந்து வந்திருக்கிறது. மொழி, பண்பாடு, அரசியல்,பொருளாதார ரீதியாகச் சோவியத்துடன் பின்னிப் பிணைந்திருந்த தேசம் அது. புரட்சிகளின் போது உக்ரைன் மக்கள் புரிந்த தியாகங்கள் சோவியத் ஒன்றியத்தை நிமிர வைத்தன. சோவியத் ஒன்றியத்திலே ரஷ்யாவுக்கு அடுத்து உக்ரைன் தான் மிகப் பெரிய நிலப்பரப்பு. உலகத்துக்கு மிகச் சிறந்த படைப்பு இலக்கியங்களை வழங்கிய மண் என்பதை விட உலகம் முழுவதுக்குமான “தானியக் களஞ்சியம்” என்று அதனைக் கூறுவதே பொருத்தம். ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தானியக்களஞ்சியமாகத் திகழ்ந்த உக்ரைன் இன்று ஐரோப்பாவின் களஞ்சியமாக மாறிவிட்டது. அடுத்து அது நேட்டோவின் உறுப்பினராகப் போகிறது என்பதே அங்கு போர் மேகங்கள் சூழந்திருப்பதற்கான காரணமாகும்.
சோவியத் ஒன்றியம் உடைந்த போது ஒரு டக்ஸி ட்ரைவராக இருந்தவர் விளாடிமீர் புடின். கேஜிபி உளவு அமைப்பின் உறுப்பினராக மாறிய அவர் படிப்படியாக அதிகாரங்களைத் தக்கவைத்து-எதிராளிகளைப் “போட்டுத் தள்ளி” – ரஷ்யாவைத் தனது இரும்புப் பிடியின் கீழ் கொண்டு வருவதில் வெற்றி கண்டார். அதிபராக நீண்டகாலம் பதவியில் நீடிக்கிறார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் அனைத்தும் ரஷ்ய நாகரீகத்துக்கு உட்பட்டவை. அவை தனித்தனி நாடுகளாக இருப்பதற்குத் தகுதியற்றவை என்ற ஒரு கோட்பாட்டை புடின் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு சோவியத் சாம்ராஜ்ஜியத்தைக்கட்டியெழுப்புவதற்கு கற்பனை பண்ணுகிறார். தனது கட்டுரை ஒன்றில் அவர் ரஷ்யாவையும் உக்ரைனையும் “ஒரே மக்கள்” என்கிறார். உக்ரைனையும் அயல் நாடாகிய பெலாரஸையும் சேர்த்து ரஷ்ய நாகரீகம்”(“Russian civilisation”) என்று கூறி ஒரே நாடாகக் கருதுகிறார். மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்கு உக்ரைனைத் தன்னோடு வைத்திருப்பதே அவரது எண்ணம். உக்ரைன் மக்கள் இதனை எதிர்க்கிறார்கள். அங்குள்ள புதிய தலைமுறை ஐரோப்பாவுடன் இணைவதையே விரும்புகின்றது. அங்கு ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபரைத் தூக்கி எறிந்த மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு அரசுத் தலைமையை வகிப்பவர் ஒரு யூத இனப் பூர்வீகம் கொண்டவர். ஐரோப்பாவின் சுதந்திரச் சந்தைகளுடன் உக்ரைனை இணைப்பதற்கு விரும்புகிறார். உக்ரைனில் 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளுமே ரஷ்ய மேலாதிக்கத்தை நிராகரித்தன. ஐரோப்பா(நேட்டோ)நோக்கிய பாதையைத் திறந்து விட்டன. இதுவே அங்கு இருநாட்டு எல்லைகளிலும் தற்போது உருவாகியுள்ள போர்ப் பதற்றத்தின் மூலக் கதை ஆகும்.
உக்ரைனின் இறைமை அது ரஷ்யாவுடன் சேர்ந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று சொல்பவர் புடின். 2015 இல் உக்ரைனின் ஒரு பகுதியாகிய கிரிமீயா குடாப்பகுதியை ஆக்கிரமித்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டார். அதன் பிறகுஅங்கிருந்து உக்ரைனுக்கு இராணுவ வழிகளில் நெருக்குதல் கொடுத்து வருகிறார். தனது எல்லையில் உள்ள உக்ரைனில் நேட்டோ கால் பதிப்பது தனது சோவியத் கனவைத் தகர்த்துவிடும் என்பதை புடின் நன்கறிவார். அதற்காக உக்ரைனை ஆக்கிரமிக்க முனைகிறார். எல்லையில் அவர் படைகளைக் குவிப்பது நிஜமான போர் ஒன்றுக்கான முஸ்தீபாகத் தெரியவில்லை. உக்ரைன் நேட்டோவில் சேர்க்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை மேற்குலகிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஓர் அழுத்தமாக மட்டுமே அதைக் கருதவேண்டியுள்ளது. எனினும் எதிர்பாராத விதமாகப் போர் மூண்டால் ரஷ்யாவின் படை பலத்தை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட நேட்டோ நாடுகள் உக்ரைனைப் பலப்படுத்துவதற்காகப் பேரழிவு ஆயுதங்களை அந்நாட்டில் குவித்துவருகின்றன. உக்ரைன் அதன் முன்னரங்குகளைப் பாதுகாப்பதற்குரிய வெடிமருந்துகள், போர்த் தளவாடங்கள்(front-line defenders) அடங்கிய 90 தொன் ஆயுதப் பொருள்களை அமெரிக்கா அங்கு இறக்கியுள்ளது நேட்டோவோடு இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி டென்மார்க், சுவீடன்,நோர்வே போன்ற நாடுகளிலும் கூட எல்லைப் பகுதிகளில் கவச வண்டிகளது நகர்வுகளைக் கண்டு மக்கள் அதிசயிக்கின்றனர். ஐரோப்பா இது போன்ற போர் ஆயத்தக் காட்சிகளைக் காண்பது கடந்த பல தசாப்தங்களில் இதுவே முதல் முறை. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தாலும் நேட்டோ நாடுகள் போரில் நேரடியாகத் தலையிடுமா? போரைத் தவிர்க்க ரஷ்யாவின் நிபந்தனைகள் என்ன? ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கு மேற்கு நாடுகள் வைத்திருக்கின்ற பொருளாதார ஆயுதம் எது? என்பன போன்ற பல விவரங்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.
(படம் : உக்ரைன் எல்லையில் பல்குழல் பீரங்கிகள். நன்றி :ரோய்ட்டர்)
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் – பாரிஸிலிருந்து குமாரதாஸன். 23-01-2022